>>
இதே மாதிரி நித்யசைதன்ய யதியின் புத்தகத்தில் ஒரு வரி, “அழகு அனுபவம் என்பது ஒருவகையில் அறிவதின் அனுபவம் தான்…” நான் மறுத்தால் அவர் `உண்டு’ என்று சொல்வார். இப்படியே தர்க்கம் போய்க் கொண்டிருக்கும், எப்போதும் சுலபமான பதிலுக்கு உட்காரவிடாதபடி பண்ணி விடுவார், எப்போதும் தொடர்ந்து இயக்கம் இருந்து கொண்டிருக்க வேண்டும், ஒரிடத்தில் சோர்ந்து உட்கார்ந்து விடக் கூடாது என்பார். தொடர்ச்சியாக துருவித்துருவி விசாரித்து அறிகிற இந்த மரபு இந்து மரபு அல்ல, பௌத்த மரபு. எனக்கு இந்த மரபுடன் மிகவும் நெருங்க முடிகிறது. ஆன்மீகம் என்பது மதத்துடனும், கடவுளுடனும் தொடர்புடையது அல்ல. அடிப்படையான கேள்விகளின் விடையாகவே `கடவுள்’ பிறந்தார் அல்லது வெளிப்பட்டார் அடிப்படையான கேள்விகளுக்கான சில விடைகளை நம்பிக்கைகளாகவும், சடங்குகளாகவும் மாற்றும் போதே மதம் பிறந்தது. ஆகவே, ஆன்மீகமும், மதமும் பின்னிப் பிணைந்துள்ளன. ஆன்மீகத் தேடல் உள்ளவன் கடவுளையும். மதத்தையும் கூர்ந்து கவனிப்பான், இருந்தாலும் அவை வேறு வேறு என்றும் அறிந்திருப்பான். எனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்ற இடத்திலிருந்து தான் படைப்பு தொடங்குகிறது. அது விரிவடையும் போது அந்தப் படைப்பும் ஆழமுடையதாகிறது, இப்படித்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென்று ஒரு பிரபஞ்சத் தரிசனத்தை உருவாக்கியிருப்பான்.
<<
பார்க்க: http://azhiyasudargal.blogspot.in/2010/10/blog-post_20.html