Monday, July 4, 2016

புறநானூறு - 127. உரைசால் புகழ்!

புறநானூறு - 127. உரைசால் புகழ்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: வேள் ஆய் அரண்டின்.
திணை: பாடாண். 
துறை: கடைஇநிலை

களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடுஇன் பனுவல் பாணர் உய்த்தெனக்
களிறில ஆகிய புல்அரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப

ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்;
சுவைக்குஇனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவுஇன்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய

முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே.


பொருளுரை:

களாப்பழம் போன்ற கரிய நிறத் தண்டினையுடைய 
சிறிய யாழுடன் இனிய பாட்டைப் பாடும் பாணர்கள், 
ஆய் பரிசாக அளித்த யானைகளை எல்லாம் பெற்றுக்கொண்டு 
போனதால் யானை கட்டும் நெடிய கட்டுத்தறிகள் 
வெறுமையாகக் காட்சி அளிக்கின்றன. 

அவ்விடத்து இப்பொழுது காட்டு மயில்கள் 
தம் கூட்டத்தோடு தங்கி இருக்கின்றன. 
பிறருக்கு அளிக்க இயலாத மங்கல 
அணிகலன்கள் மட்டுமே அணிந்த 
மகளிர் ஆயின் அரண்மனையில் உள்ளனர். 

இவ்வாறு இருப்பதால், ஆயின் அரண்மனை 
தன் பெருமையில் குறைந்தது என்று கூறுவர்.
ஆனால், இனிய சுவையுடன் தாளித்த 
உணவை பிறர்க்கு அளிக்காமல் 
தாம் மட்டும் வயிறு நிரம்ப உண்டு, 
மிகுந்த புகழை இழந்த 
முரசுடைய செல்வர்களின் அரண்மனைகள் 
ஆயின் அரண்மனைக்கு ஒப்பாகாது.


Description: (A Song About Vel Aai Andiran)

Oh king ! As you have given all the elephants to the Paanaas 
who came with yaazh singing sweet songs,  
the elephant shed is empty and now there are peacocks. 

Your palace is now without beauty as it has no jewels to give to the singers 
except the mangala thread of your wife. 

The palaces ,where the kings eat tasty food without giving it to others, 
are not equal to aai's  palace. 
-Uraiyoor Eanichcheri Mudamosiyaar




முலம்:
http://puram400.blogspot.in/2009/11/127.html


No comments: