Thursday, June 30, 2016

புறநானூறு - 126. கபிலனும் யாமும்!

புறநானூறு - 126. கபிலனும் யாமும்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். 
துறை: பரிசில்

ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தைஇ
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!

வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே
நின்வயிற் கிளக்குவம் ஆயின் கங்குல்
துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்
பறைஇசை அருவி முள்ளூர்ப் பொருந!
தெறலரு மரபின்நின் கிளையொடும் பொலிய

நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்
புலன்அழுக்கு அற்ற அந்த ணாளன்
இரந்துசென் மாக்கட்கு இனிஇடன் இன்றிப்
பரந்துஇசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடல்

பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப்
பிறகலம் செல்கலாது அனையேம்; அத்தை;
இன்மை துரப்ப இசைதர வந்துநின்
வண்மையின் தொடுத்தனம் யாமே; முள்எயிற்று
அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப

அண்ணல் யானையொடு வேந்துகளத்து ஒழிய
அருஞ்சமம் ததையத் தாக்கி நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே!



பொருளுரை:

பகைவர்களுடைய யானைகளின் நெற்றிப் பட்டத்தில் இருந்த பொன்னால் செய்த தாமரைப் பூ போன்ற அணிகலன்களைப் 
பாணர்களின் தலையில் அணிவித்து அழகு செய்த பெருமையும், 
சிறந்த தலைமையும், புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையும் உடைய வலியவர்களின் வழித்தோன்றலே! 
யாம் எதையும் திறம்படக் கூறும் ஆற்றல் இல்லாதவராக இருப்பினும் 
விரைவாக உன்னிடத்து வந்து உன் புகழைச் சொல்லுவேம் என்று இங்கு வந்துள்ளோம். 

இரவு ஓரிடத்தே அடங்கி உறங்குவது போன்ற அடர்ந்த இருளுடைய சிறுகாடுகளும் 
பறையொலி போலும் ஒலி பொருந்திய அருவியையுமுடைய முள்ளூர் வேந்தே! 
அழித்தற்கு அரிய பெருமையுடைய உன் சுற்றத்துடன் நீ விளங்குவாயாக.

இவ்வுலக மக்கள் எல்லாரினும் தூய அறிவுடைய அந்தணனாகிய கபிலன், 
இரந்து செல்லும் பரிசிலர்கள் சொல்வதற்கு இனி இடம் இல்லை என்று 
கூறுமளவுக்கு உன் பெருகிய புகழ் நிலைத்து நிற்குமாறு பாடிவிட்டான். 

சினமிக்க படையுடைய சேரன் மேற்குக் கடலில் பொன் கொண்டு 
வரும் கலத்தைச் செலுத்திய காலந் தொடங்கி அவ்விடத்துப் பிறர் கலம் செல்வதில்லை. 
அதுபோல், கபிலன் உன்னை புகழ்ந்து பாடிய பிறகு யாம் பாட முடியாத நிலையில் உள்ளேம். 

ஆயினும், வறுமையால் துரத்தப்பட்டு உன் புகழால் இழுக்கப்பட்டு 
உன் வள்ளல் தன்மையைப்பற்றி சில சொல்லத் தொடங்கினோம். 
முள்போன்ற பல்லையுடைய பாம்பை நடுங்க வைக்கும் இடிபோல் முரசு ஒலிக்க, 
யானையொடு அரசும் களத்தில் அழியுமாறு பொறுத்தற்கரிய 
போரைச் சிதறடித்துப் பொருந்தாப் பகைவரைத் தடுக்க வல்ல, 
பெண்ணையாற்றின் அழகிய பக்கங்களையுடைய நாட்டுக்குத் தலைவனே!

Description: (A Song About Malaiyamaan Thirumudikkaari)

Oh king you are the successor of a great family. 
You melt the ornaments on the foreheads of the enemies' elephants, 
make them as golden lotus and adorn the Paanaas' heads who come singing about you. 

We are not able to sing your fame. Oh king of the Mulloor hill ! 
You have dark forests  which look like the sleeping night and singing water falls. 
We have come to sing about you. Let your family and dynasty get greatness. 
Kapilar who has sung your fame so much so that  there is nothing to sing about you. 

Can we sing new about you ? When Seran's vessel sails on the western sea, can the vessels of others go there ? 
Like that after kapilar's song we cannot sing. 
We  have come to sing about you in order to drive away our poverty. 
Oh king ! You are the lord of the country which is on the bank of the Pennai river. 

You are killing the enemies' elephant army with your elephant army 
which goes with the sound of the murasu which sounds like thunder which frightens the cobras. 
You give us gifts hearing our songs too. 

-Maarokkaththu Nappasalaiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/11/126.html