Wednesday, February 10, 2016

புறநானூறு - 17. யானையும் வேந்தனும்!


புறநானூறு - 17. யானையும் வேந்தனும்!

பாடியவர்; குறுங்கோழியூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை; வாகை. 
துறை: அரசவாகை; இயன்மொழியும் ஆம். 

தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு
ஒன்று பட்டு வழி மொழியக்,
கொடிது கடிந்து, கோல் திருத்திப்,

படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல், மலை வேலி,

நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது,
நீடு குழி அகப் பட்ட


பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு,
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடி யாங்கு
நீ பட்ட அரு முன்பின்,


பெருந் தளர்ச்சி, பலர் உவப்பப்,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக் கூறலின்,
உண் டாகிய உயர் மண்ணும்,
சென்று பட்ட விழுக் கலனும்,

பெறல் கூடும், இவன்நெஞ்சு உறப்பெறின்எனவும்,
ஏந்து கொடி இறைப் புரிசை,
வீங்கு சிறை, வியல் அருப்பம்,
இழந்து வைகுதும்.இனிநாம்; இவன்
உடன்று நோக்கினன், பெரிது எனவும்,

வேற்று அரசு பணி தொடங்குநின்
ஆற்ற லொடு புகழ் ஏத்திக்,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய
மழையென மருளும் பல் தோல், மலையெனத்
தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை,

உடலுநர் உட்க வீங்கிக், கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப,
இடியென முழங்கு முரசின்,
வரையா ஈகைக் குடவர் கோவே!


பொருளுரை: 

தென் திசையில் குமரி மலையும், வட திசையில் இமயமும், கிழக்கு மேற்கில் கடல் எல்லையாகவும், நடுப்பட்ட நிலத்தில் உள்ள குன்றம், மலை, காடு, நாடு என்பனவற்றை உடையோர் ஒன்றாக வழிபட்டு ஆமோதிக்க, தீமைகளைப் போக்கி அரசு செம்மையாகச் செய்து, அரசர்க்குரிய இலக்கணத்துடன் ஆட்சி செய்து நடுவு நிலைமை யுடன் நல்லபடியாக சுழற்சியும் ஒளியுமுடைய சக்கரத்தால் நாடு முழுவதையும் ஆண்டோரது மரபின் காவலனே! 

குலைகள் தாழ்ந்து பறிப்பதற்கு ஏற்றதாக உள்ள தென்னை மரங்களையும் அகன்ற வயல்களையும், மலைகளை வேலியாகவும், நிலாப் போன்ற வெண்மையான மணலையுடைய அகன்ற கடற்கரையையும், கடலையடுத்த தெளிந்த உப்பங்கழியிடத்துப் பூத்த சிவந்த ஒளிவிடும் பூக்களையும் உடைய குளிர்ந்த தொண்டி என்ற ஊரில் உள்ளோர் விரும்பும் வெற்றி வேந்தனே! 

யானை, பொய்யான நிலம் போலத் தோன்றும் பள்ளத்தை கருத்துடன் அறிந்து கொள்ளாது மனச்செருக்கால் நீண்ட பள்ளத்தில் அகப்பட்டு, பெருமையும் வலிமையும் உடைய பல இடையூறுகளைக் கண்டு தேறிய கொம்பு முதிர்ந்த வயதான ஆற்றலுடைய யானை அதன் நிலை கலங்கினாலும் அப்பள்ளத்தைத் தூர்த்து தன் உறவு விரும்ப, தன் இனக் கூட்டத்துடன் சென்று சேர்ந்தது போல, யாராலும் காண்பதற்கு அரிய உனது வலிமையால் பகையைப் பொருட்படுத்தாது உனக்கு ஏற்பட்ட பெரிய தளர்வு நீங்கி உன் நாட்டுக்குச் சென்றது பலரும் மகிழும்படி விரிந்த உன் சுற்றத்தார் பலர் நடுவே உயர்வாகச் சொல்லப்படுகிறது. 

ஆதலால், நீ செழியனால் பிடித்து அடைக்கப்படுவதற்கு முன், உன்னால் அழிக்கப் பட்டு பின் தங்கள் அரசை அடையாது உன் வரவு பார்த்திருந்த் அரசர் இவனால் கொள்ளப்பட்டு, தன்னிடத்தே இருந்து விடுபட்டுப் போன உயர் நிலமும், இவனால் எடுத்துச் செல்லப்பட்ட சிறந்த அணிகலமும் திரும்பக் கிடைக்கவும் கூடும் எனவும், இவனது பரிவான நெஞ்சம் நமக்கு உரித்தாகக் கிடைக்கப் பெறக்கூடுமானால் என நினைந்தார்கள். 

உன் வரவை எதிர்பாராத பகைவர்கள், தாங்கள் கவர்ந்து கொண்ட உயர்ந்த கொடி பறக்கும் உயர்ந்த மதிலையும், மிகுந்த காடுகள், அகழி முதலிய காவலாக உடைய அகலமான அரண்களை நாம் இனி இழந்து இருப்போம் என்றும், இவன் கோபத்துடன் நம்மைப் பார்த்தாலே மிகப் பெரிய செயல் என்று பகை வேந்தர் ஏவல் செய்யத் தொடங்குவதற்குக் காரணமாகியவன் நீ! 

திரண்ட முகிலெனக் கருதி அஞ்சத்தக்க கேடயங்கள் ஏந்திய பல படைகளையும் மலையிடத்தே கூடு அமைக்கும் இயல்புள்ள தேனினம், யானையின் மதநாற்றத்தை தேன் கொண்ட மலையெனக் கருதித் தங்கும் பெரிய பல யானைகளையும் மாறுபடும் வேந்தர் அஞ்சும்படி பெருகியதால் கடலோ எனக் கருதி மேகம் நீரை முகக்க முயற்சிக்கும் அளவு பெரும் படை மட்டுமல்லாது, நஞ்சை வைத்துள்ள பல்லினையுடைய பாம்பின் தலை நடுங்க இடியைப் போல முழங்கும் முரசினையும் எல்லோர்க்கும் எப்பொருளும் அளவில்லாது கொடுக்கும் வள்ளன்மையுடைய குடநாட்டார் வேந்தே! உனது வலிமையையும் புகழையும் வாழ்த்துதல் பொருட்டு உன்னைக் காண வந்தேன் பெருமானே! 


Description: (A Song About Seramaan Yaanaikkatchey Maandhranjcheral Irumporai)

All the people of the country which has Kanniyakumari in the south , Himalayas in the north and blue seas in the east and the west as boundaries and having hills, mountains, forests and towns gather together and praise you. 

You destroy evils. You rule a righteous rule. You collect one sixth as tax. You send your shining, righteous wheel without any hurdle.

You are the successor of those who ruled the whole world. You have coconut trees and paddy fields. Your country has mountains as its fence. 

You have seashore forest which has sand like the shining moon. You have pools where flame like aambal flowers blossom. You have conquered the cold Thondi port. 

The elephant without knowing the deep pit which is for catching it, falls into it. The strong elephant which has the killing nature destroys the pit with its tusks. It comes up and lives with its relatives. 

Like that elephant, you come back and live with your relatives when you are imprisoned. All are praising you. 

Your enemies think that if they get your love, they can get back their land and wealth. If you see them with anger, they will loose all and have to suffer. They serve you because of your strength and fame. 

Oh king ! I have come to see you and praise your strength and fame. You have armours which resemble rainy clouds. 

You have many big elephants which look like mountains so that the bees come for honey. You have a very big army so that the clouds come to take water. 

Apart from these you have a drum which sounds like the thunder and frightens the poisonous snakes. Oh king ! You are giving to the poor in large quantity. -Kurungkozhiyoorkkizhaar

முலம்:
http://eluthu.com/kavithai/125144.html

http://thamizhanna.blogspot.in/2010/06/purananooru-16-to-25-english.html


No comments: